சத்தீஸ்கரில் சுக்மா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 26 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த அழகுப்பாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் உள்ளிடோரும் உயிரிழந்தனர்.
நேற்று இவர்களின் உடல்கள் விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டு சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்த அழகுப்பாண்டியின் தம்பி பவித்திரனும் ராணுவத்துக்கு தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவித்திரன் அடுத்த மாதம் ராணுவத்தில் இணையவுள்ளதாக அழகுப்பாண்டியின் தந்தை பிச்சை அழகு கூறியுள்ளார்.
அழகுப்பாண்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலர் ராணுவத்திலே பணியாற்றி வருகின்றனர். பிச்சை அழகு இருபது வருடங்களுக்கு முன்னரே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் இரு மகள்களையும் ராணுவ வீரர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார்.
தன் மூத்த மகன் சுட்டுக்கொல்லப்பட்ட போதும், இளைய மகனை ராணுவத்துக்கு அனுப்பும் தந்தை பிச்சை அழகுவின் தேசப்பற்று ஊர்மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.