இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் என்றால் அந்த பட்டியலில் மஹேல ஜெயவர்தனவும் ஒருவராக உள்ளார். அந்த வகையில் அவர் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது 10 ஆவது ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்த்தன செயற்பட்டு வருகின்றார்.
இருப்பினும் இலங்கை அணிக்கு ஏன் பயிற்சியாளராக செயற்படவில்லை என இந்திய ஊடகம் ஒன்றிக்கு செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, நான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லை.
இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் குறுங்கால ஒப்பந்தங்களையே மேற்கொண்டுள்ளேன்.
சுமார் 18 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி முழுநேர பயிற்சியாளராக மாறுவதென்பது உண்மையிலேயே கடினமானதொன்று.
தற்போது எனது பொறுப்பு எனது குடும்பத்தினை கவனிப்பதே. அவர்களுடன் நேரத்தினை ஒதுக்க வேண்டியது எனது கட்டாயக் கடமைகளுள் ஒன்றாகும்.
இலங்கை அணி குறித்து கூறுவோமாயின் அவர்களுக்கு சிறந்ததொரு பயிற்சியாளர் இருக்கிறார்.
எவ்வாறாயினும் நடைமுறையிலுள்ள முறைமைகளில் இருந்து தூரமாகி இருப்பது சாலச் சிறந்தது என நினைக்கின்றேன் என கூறியுள்ளார்.






