காஷ்மீரில் பேஸ்புக் உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்கள் முடக்கம்!!

545

இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், பேஸ்புக், உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். மக்கள் நலனை கருத்திற் கொண்டு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த கட்டளை பிறப்பிக்கபடும் வரை அமுலில் இருக்கும் என காஷ்மீரின் உள்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீரில் இந்த மாதத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல், வன்முறைகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

இணையதளம் முடக்கம் அரசாங்கத்தால் எடுக்கப்படும் பொதுவான ஒரு நடவடிக்கையாக இருந்த போதிலும், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே சமூக வலைத்தளங்களை முடக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.