வடகொரிய இராணுவ அணிவகுப்பில் போலி ஆயுதங்கள்!!

505

 
மூன்றாவது உலக யுத்தம் என்று குறிப்பிடப்படும் வடகொரியா மீதான யுத்த முஸ்தீபுகள் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியாவின் ஆயுத பலத்தில் பல சித்திரிப்புகள் இருப்பதாக போர் மற்றும் ஆயுத நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

தமது ஆயுதப் படையணி மற்றும் ஆயுதங்கள் என்பனவற்றைக் காட்சிப்படுத்துவதன் மூலம் மட்டுமே தம்மை பலசாலியாகக் காட்டிக்கொள்ள முனைவதாக அமெரிக்க சிரேஷ்ட யுத்த ஆய்வாளர் மைக்கல் ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை கிம் இல் சங்கின் 105வது பிறந்த தினம் மற்றும் வடகொரியாவின் தேசிய இராணுவத்தின் 86வது ஆண்டு தினம் என்று, நாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆயுதங்களாலேயே வடகொரியா அழகுபடுத்தி வருகின்றது.

கிம் இல் சங்கின் பிறந்த தின விழாவின்போது, அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா ஏவும் ஏவுகணை விழுந்து வெடிப்பது போன்ற ‘அனிமேஷன்’ காணொளியொன்றை வடகொரியா வெளியிட்டிருந்தது.

அதுபோலவே, இராணுவ ஆண்டு தினத்தின்போது நடத்தப்பட்ட இராணுவத்தினரின் அணிவகுப்பில், பயன்படுத்த முடியாத முன்மாதிரி ஆயுதங்களையும், போலியான ஆயுதங்களையுமே வடகொரியா காட்சிப்படுத்தியிருப்பதாக ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகள் பலவற்றிலும் இராணுவ வீரர்கள் அணியும் பாதுகாப்பு கண்ணாடி கூட வடகொரியா வசம் இல்லை என்றும் ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, தம்மிடம் இருக்கும் ஆயுத பலத்தை பல மடங்கு பெரிதாக ‘காட்டிக்கொள்ளவே’ வடகொரியா முனைவதாகவும் ப்ரெஜன்ட் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அண்மையில் நடத்திய இரண்டு ஏவுகணைப் பரிசோதனைகளும் தோல்வியிலேயே முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.