ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் : தண்டவாளத்தில் விழுந்த குழந்தை!!

426

இந்தியாவில் ஓடும் ரயிலின் கழிவறையில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தனா (26), நிறை மாத கர்ப்பிணியான இவர் தனது கணவருடன் ரயிலில் மும்பையில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது கழிவறைக்குள் சென்ற சந்தனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் துரதிருஷ்டவசமாக பிறந்த குழந்தை கழிவறையின் ஓட்டை வழியாக ஓடும் ரயிலிலிருந்து தண்டவாளத்தில் கீழே விழுந்துள்ளது.

உடனே பதறி போன சந்தனா குழந்தையை காப்பாற்றுங்கள் என கத்தினார். இதை பார்த்த ரயிலிருந்த பயணிகள், உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

இதனையடுத்து ரயில் குழந்தை விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தாண்டி நின்றது.

பின்னர் ரயில்வே ஊழியர்களும், பயணிகளும் தண்டவாளத்தில் சென்று பார்த்த போது சிறு காயங்களுடன் குழந்தை கீழே கிடந்துள்ளது.

பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு சந்தனாவும் அவர் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.