நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் நேரடியாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்கனவே திட்டமிட்டார். இதற்காக பொது மக்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால் திரையரங்க அதிபர்கள் எதிர்த்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
டி.டி.எச்.களில் ஒளிபரப்பாகாமல் திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டன. தற்போது விஸ்வரூபம் 2 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கமலஹாசன் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தையாவது 3 மொழிகளிலும் டி.டி.எச் மூலம் ஒளிபரப்பிவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்.
திரையரங்குகளில் திரையிடுவதற்கு முந்தைய நாள் டி.டி.எச்.களில் ஒளிபரப்பும் முடிவில் இருக்கிறார். இதை திரையரங்க அதிபர்கள் ஏற்பார்களா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியொன்றில் கமல் பங்கேற்று பேசும் போது விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்சில் வெளியிடுவேன் என்று அறிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..
திரைப்படங்களை டி.டி.எச் மூலம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்புவது எதிர்காலத்துக்கு அதை எடுத்துச் செல்வது ஆகும். டி.வி.யில் ஒளிபரப்பும்போது அதற்கு தகுந்த கட்டணம் வசூலிக்கப்படும். டி.வி. மூலம் வீட்டில் மட்டும் மக்கள் பார்க்கும் நிலைமை இருக்காது. தியேட்டர்களிலும் படம் திரையிடப்படும். ஆனாலும் இந்த முறையை எதிர்க்கிறார்கள்.
எல்லோருக்குமே வீட்டில் சமையல் அறைகள் இருக்கிறது. ஆனாலும் எதற்காக நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன. விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளேன். இந்தியாவில் அதை அனுமதிக்காவிட்டால் அமெரிக்காவில் டி.டி.எச்.களில் ஒளிபரப்பு செய்வேன் என்று கமலஹாசன் பேசினார்.