தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை பதித்த நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நிலை சரியில்லாத காரணத்ததால் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது தந்தையின் நினைவுகள் குறித்து அவரது மகள் சண்முகப்பிரியா பகிர்ந்துகொண்டுள்ளார்.
ரயில்வே துறையில் வேலை பார்த்த எனது தந்தை சினிமாவுக்குள் வருவதற்காக அந்த பணியினை ராஜினாமா செய்துவிட்டு வண்டிசக்கரம் என்ற படத்தை தமிழில் முதன்முதலாக இயக்கினார்.
அந்த படம் வெற்றியடைந்ததையடுத்து, தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எனது தந்தை ஒரு நடிகனாக இருந்தபோதும், நாங்கள் நடிப்புத்துறைக்கு வரவேண்டாம் என கூறினார்.
நாங்கள் நன்றாக படித்து ஒரு நல்ல துறையில் செட்டில் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. அதன்படியே, எங்களை நன்றாக படிக்கவைத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பினார்.
படப்பிடிப்பில் கலந்துகொள்ள வெளி ஊர்களுக்கு சென்றால், அங்கு என்ன உணவு சிறப்பாக உள்ளதோ, அதனை எங்களுக்கு வாங்கிகொண்டு வருவார்.
உற்சாகப்படுத்தியே காரியத்தைச் சிறப்பாக செய்ய வைப்பார். செல்லம் கொடுக்குற அதே நேரம் நல்லா படிக்கலைன்னா மட்டும், கண்டிப்போட நடந்துக்குவார்.
அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவர் நிஜவாழக்கையில் ஒரு ஹீரோ. வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் சில படங்களை பார்த்துவிட்டு, எனது உடல்நிலை மட்டும் சரியாக இருந்தால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பேன் என கூறுவார்.
சமீபத்தில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, ஊசி போட மறுத்துவிட்டார்.
அப்போது வண்டிசக்கரம் படத்தை ரீமேக் செய்வது குறித்து உங்களோடு பேசுவதற்காக சிவக்குமார் அங்கிள் வெளியில் காத்துகொண்டிருக்கிறார் என்ற பொய்யை சொன்னதும் உடனே ஊசிபோட்டுக்கொண்டார்.
அவர் ஊசிபோட்டுக்கொள்வதற்காக அப்படி ஒரு பொய்யை சொன்னேன். அவர் உயிரோடு இருந்தபோது எந்த அளவுக்கு நல்ல படியாக பார்த்துக்கொண்டாரோ, அந்த அளவுக்கு இப்போது சாமியாகி எங்களை பார்த்துக் கொள்வார் என உருக்கமாக கூறியுள்ளார்.