யாழ். மாநகர சபை ஊழியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!

382

2

யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாநகர சபை முன்றலில் இன்று காலை 8 மணி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

நாம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம். இதுவரை இரு தடவைகள் எமக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நிரந்தர ஊழியர்காளாக எம்மை உள்வாங்க இல்லை.

தற்போது உள்ள ஆணையாளர் மீண்டும் நேர்முக தேர்வு நடத்தியே எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கின்றார். ஆனால் இதற்கு முன்னர் இருந்த இரண்டு ஆணையாளர்களும் எமக்கான நேர்முக தேர்வை நடத்தி இருந்தும் நிரந்தர நியமனத்தை வழங்கவில்லை.

தற்போது மூன்றாவது ஆணையாளராக உள்ளவரும் எமக்கு மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வு வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2002 ம் ஆண்டு எமக்கான அடிப்படை கல்வித்தகுதி 8ம் ஆண்டாக இருந்தது. தற்போது க.பொ.த. சாதாரண தரம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்படைய உள்ளனர்.

அதேவேளை இன்று முதல் மாநகர சபையின் பாதுகாப்பு பிரிவினை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். அதேபோல சுகாதார பொருளியல் பிரிவினையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கேள்வி கோரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எனவே மூப்பு அடிப்படையில் எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை நாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊழியர்கள் மேலும் தெரிவித்தனர்.