சோமாலிய அமைச்சரை தீவிரவாதியென நினைத்து சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்!!

319

சோமாலியா அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸை தீவிரவாதி என தவறுதலாக எண்ணி, பாதுகாப்பு வீரர்கள் கொலை செய்துள்ளனர்.

பொதுப்பணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸ் (வயது 31) நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு காரில் சென்றுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் காரில் வருவது தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் என தவறுதலாக எண்ணி அமைச்சரின் காரின் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் காருக்குள் அமர்ந்திருந்த அமைச்சர் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தாக்குதலுக்குப் பின்னர் தான் அவர் அமைச்சர் என்பது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இத்தகவல் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியா நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அப்துலாஹி ஷேக் அபாஸ் மிகவும் இளம் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவில் தீவிரவாதிகள் மற்றும் போராளிகளால் அடிக்கடி அரசாங்கத்திற்கு எதிராக தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் தலைநகர் மொகடிஷூவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.