7 வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்து : பரிதாபமாக பலியான 4 இளைஞர்கள்!!

254

கனடா நாட்டில் கார் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 வாலிபர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Kingston நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வாலிபர்கள் 4 பேர் நள்ளிரவு வேளையில் காரில் வெளியே புறப்பட்டுள்ளனர்.

சில மணி நேரப்பயணத்திற்கு பின்னர் நெடுஞ்சாலை எண் 401 சாலையில் கார் சென்றபோது இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் எதிர்ப்புறமாக வந்த லொறி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

லொறி மோதிய வேகத்தில் தீப்பிடித்து வேகமாக எரிந்ததால் அதில் பயணித்த 4 பேரும் வெளியேற முடியாமல் காருக்குள் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து நிகழ்ந்த சில வினாடிகளில் அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த பொலிசார் லொறி ஓட்டுனரான Dunhill Tabanao என்ற 37 வயதான நபரை கைது செய்தனர். எனினும், உயிரிழந்த 4 வாலிபர்கள் குறித்து பொலிசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

பொலிசார் நடத்திய விசாரணையில் லொறி ஓட்டுனர் மீது தவறு இருந்தது தெரியவந்துள்ளதால் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.