இந்தியாவின் உதய்பூர் பகுதியில் 12 அங்குலத்தில் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைப்பெற்றுள்ளது.
உதய்பூரை சேர்ந்த எஸ்.பி.ஜெயின் என்பவருக்கு 470 கிராமில் 12 அங்குலமுடைய குழந்தை பிறந்தது. 28 வாரங்களில் பிறந்த இந்த குழந்தையின் உடல் வளர்ச்சி முழுமையடையாமல் இருந்தது. மேலும், குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறந்து 15 நாள்களே ஆன உலகின் மிக சிறிய குழந்தையாக கருதப்படும் இக்குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கீதாஞ்சலி மற்றும் ஜீவாந்தா மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். தற்போது, குழந்தை நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் எடை 600 கிராமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், ‘இனி தான் எங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டவுள்ளோம். எங்கள் குழந்தை உயிர் பிழைத்தது மிகப்பெரிய அதிசயம்’ என கூறியுள்ளனர்.







