இலங்கை தம்பதியை நாடு கடத்த தீர்மானம் : அமெரிக்க புலனாய்வு அதிகாரி கண்டனம்!!

244

ஹொங்கொங் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வுதுறை அதிகாரி எட்வட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தனக்கு அடைக்கலம் வழங்கிய அகதிகளின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஹொங்கொங் அரசாங்கத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரியாக செயற்பட்ட எட்வட் ஸ்னோடன், புலனாய்வுத் துறையின் ரகசியங்களை பகிரங்கப்படுத்திய பின்னர் அமெரிக்காவை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

அதன் போது ஹொங்கொங்கில் அவர் மறைந்திருந்த இரண்டு வார காலத்தில் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அவருக்கு தங்குமிடம் வழங்கியிருந்தனர்.

குறித்த புகலிட கோரிக்கையாளர்களின் வழக்குகளுக்கு ஹொங்கொங் அரசாங்கம் உதவும் எனவும், தங்களின் தாய் நாட்டிற்கு அனுப்பப்படாமல் புகலிடம் வழங்கப்படும் எனவும் அவர்கள் பல வருடமாக நம்பியிருந்தனர். எனினும் தற்போது நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளினால் அவர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த தம்பதியினர் நாடு கடத்தப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமக்கு சொந்த நாட்டில் ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் தாய் நாட்டிற்கு சென்றால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ” அவர்கள் சித்திரவதை, துஷ்பிரயோகம், மிரட்டல் மற்றும் போர், போன்ற மிகவும் கடினமான சூழ்நிலைகள் ஆகியவற்றால் தாய் நாடுகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட நல்லவர்கள்” என ஸ்னோடென் இன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களை பாதுகாக்குமாறு கோரியவர்கள் தற்போது வெளிப்படையான அநீதியை எதிர்கொண்டுள்ளார்கள் என ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.

“ஹொங்காங் அரசாங்கத்தில் உள்ள ஒருவர் இந்த குடும்பங்களை உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார், என ஸ்னோவ்டென் ஒரு தெளிவான வெள்ளை சுவருக்கு எதிரில் நின்று பேசிய வீடியோவில் கூறியுள்ளார்.