நாடு கடத்த வேண்டாம் என ரோஹிஞ்சாக்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை!!

550

தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்கள் கோரியுள்ளனர்.

இவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்புடன் கலந்துரையாட இருப்பதாக கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்களுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் வழக்கறிஞர் ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான அமைப்பில் தஞ்சம் கோரியிருந்த ரோஹிஞ்சா இனத்தவர்களில் முப்பது பேர், சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், இலங்கையின் கங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பெண்கள் ஏழு பேர் மற்றும் 16 சிறார்களும் அடங்குவர்.

இவர்கள் தொடர்பான வழக்கு கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

எனினும் தடுப்புக்காவலில் இருக்கும் ரோஹிஞ்சா இனத்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்தாக அமையும் என்று அவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த வழக்கை 14 நாட்கள் ஒத்தி வைத்த நீதிபதி, ரோஹிஞ்சா இனத்தவர்களை மிரிஹானவிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள தடுப்பு முகாமில் தொடர்ந்தும் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் முன் வைக்கப்பட்டுள்ளது.