தவளைகளுக்கு தாலி கட்டியதால் மழை : ஆனந்தத்தில் மக்கள்!!

613

frog_marriage

தமிழ்நாட்டில் மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது.

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் திகதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் திகதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

தவளைகளுக்கு புத்தாடை கட்டி மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

பின்பு 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.

நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.

திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த அன்பளிப்பு பணம் 3 ஆயிரம் சேர்ந்தது. காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம், குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்