சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோடை வெயிலின் தாக்கத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களை இந்த ஆண்டு கடுமையாக பாதித்துள்ளது.
பருவமழை தாமதம் உள்ளிட்ட காரணங்களால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலில் சிக்கி இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெயிலினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தது உள்ளிட்ட நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் வரை அம்மாநிலத்தில் மட்டும் அதிகம் பேர் பலியாகியுள்ளனர்.
44 முதல் 46 டிகிரி வரை வெப்பநிலை அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் தலைநகர் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் இந்த ஆண்டு வெயிலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் தென் கிழக்கு பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.






