நேற்று (21.05.2017) இரவு மதவாச்சியகுடா, வல்பொல பகுதிக்குள் நுழைந்த யானை வீதியால் நடந்து சென்ற இளம் குடும்ப பெண்ணை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருமணம் முடித்து பொலனறுவையில் வசித்து வந்த நிஷாஞ்சல குமாரி (வயது32) தன்னுடைய தாயாரை பார்க்க வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் வந்திருந்த போதும் தனது உறவினர்களையும் பார்த்து விட்டு வருவதாக கூறி வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
கூக்குரல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் உடனடியாக மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறினர். தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு 11 வயதில் ஒரு பெண்பிள்ளையும் உள்ளார்.
யானை அப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு சேதம் விளைவித்து அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதியினை நோக்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.