வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழிப் பாடசாலை ஒன்றில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலயத்திலேயே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தமிழ் மொழி கற்பிக்கப்படவில்லை எனவும், முதலாம் தவணைப் பரீட்சையில் கூட தமிழ் மொழிக்கான புள்ளிகள் வழங்கப்படாது மாணவர்களது தேர்ச்சி அறிக்கையில் தமிழ் மொழி புள்ளி பதியுமிடம் வெட்டப்பட்டு உள்ளதாகவும் மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.
தரம் 11 வரையுள்ள குறித்த பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கப்படாமையால் கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றியவர் கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் பெற்று சென்றதாகவும், அதன் பின்னர் புதிய ஆசிரியர் நியமிக்கப்படாமையினாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தற்போது பெற்றோர்களும், மாணவர்களும் தமது பாடசாலைக்கு தமிழ் ஆசிரியரை நியமித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







