ஆயுதப்போராட்டத்தால் தான் மாகாணசபை உருவாகியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா, ஓமந்தை, நாவற்குளத்தில் வாழ்ந்த கனகசபை நல்லதம்பியின் (உடையார்) நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவும் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..
எங்களது கிராமங்களை பிரதேசங்களை கட்டியெழுப்ப பல ஆயிரம் கோடி நிதி தேவையாகவுள்ளது. ஒரு பக்கம் நாங்கள் அரசாங்கத்துடன் மோத வேண்டியுள்ளது. மறுபக்கம் எங்களது கட்சிக்குள்ளே தனிநபர் ஆதிக்கம் காரணமாக எடுக்கப்படுகின்ற முடிவுகளால் கட்சிக்குள்ளும் நாங்கள் சில விடயங்களை கையாள வேண்டியுள்ளது.
இன்று எங்களுக்குள்ளே ஒரு மாகாணசபை உருவாகியுள்ளது என்றால் அது ஒரு ஆயுதப்போராட்டத்தால் தான் உருவாகியுள்ளது. ஆயுத போராட்டம் தான் பல கசப்பான அனுபவங்களை எங்களுக்கு தந்தாலும் கூட அந்த ஆயுத போராட்டம்தான் உலகத்தை தமிழ் மக்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
வடகிழக்கு இணைந்த மாகாண சபை இருந்தது என்றால் எங்களது ஆயுத போராட்ட காலத்தில் தான். எங்களது போரிலே பாதிக்கப்பட்ட கை, கால், கணவனை இழந்து பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் தான் நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே எங்களுக்கு கீழ் ஆயிரக்கனக்கானவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் நாங்கள் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.






