சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை!!

533

டெல்லியில் இளைஞர்கள் இருவர் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இ-ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரவீந்தர், அங்குள்ள முகர்ஜி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு மதிய உணவு சாப்பிட வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள பொது கழிப்பிட சுவற்றின் மீது டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் சிறுநீர் கழித்துள்ளனர்.

இதைக் கண்ட ரவீந்தர், கழிப்பிடத்தை பயன்படுத்துமாறு கூறியதுடன், தனது பாக்கெட்டில் இருந்து சில்லறையை எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ரவீந்தரின் சட்டை காலரை பிடித்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

அருகில் இருந்தவர்கள் மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து அதே இடத்திற்கு கும்பலாக வந்த மாணவர்கள், ரவீந்தரை கல்லால் அடித்து உதைத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரவீந்தரின் சகோதரர் வீரேந்தர், அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பலத்த காயங்களுடன் வீடு திரும்பிய ரவீந்தருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ரவீந்தர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.