வவுனியா அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு கோரிக்கை!!

609

தென்னிலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வவுனியா மாவட்டசெயலகம், வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகம் ஆகியவற்றில் உடனடியாக வழங்குமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்..

கடந்த வாரம் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

விசேடமாக இரத்தினபுரி, கழுத்துறை, காலி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதுடன் பலர் மண்சரிவு காரணமாக மண்ணுள் புதைந்துள்ளனர்.

அனர்த்தத்தில் பாதிக்கப்படாத மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய தருணம் இதுவென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகளை எதிர்பார்த்துள்ளதுடன் மழை தொடருமாயின் அப்பிரதேச மக்கள் மேலும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

உலர் உணவுப்பொருட்கள் ஒரு குடும்பத்திற்கு தேவையான அளவு பொதி செய்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. அத்துடன் வவுனியாவைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் 10 கிலோ அரிசி பக்கற் 1000 வழங்கவுள்ளதாகவும் இவ்வாறாக உணவுப்பொருட்களை முன்வந்து வழங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிவாரணப்பொருட்கள் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு அனுப்பப்டவுள்ளது எனவும் தெரிவித்தார்.