வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவனுக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் வேண்டுகோளின்பேரில் கனடா புன்னகை அமைப்பினால் (Smile Foundation) இன்று (01.06) வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் சு. மிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், இலங்கை புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. சந்தரூபன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் பாடசாலை அதிபர், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர், பிரதி அதிபர் திரு.மதிவதனன் ஆசிரியர் திரு.வில்வராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
உளவளதுறை ஆசிரியர் திருமதி யசோதரன் அவர்கள் குறித்த மாணவனின் வகுப்பு ஆசிரியை திருமதி பத்திரனா அவர்கள் மூலம் தெரிவு செய்த வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் வசிக்கும் செல்வன் செல்வராசா தர்சிகனுக்கு பாடசாலை அதிபர் குறித்த துவிச்சக்கர வண்டியை கையளித்தார் .
இத்துவிச்சக்கர வண்டியை கனடாவில் உள்ள சமூக ஆர்வலர் சிவா சிவசோதிநாதன் தனது தந்தையார் அமரர் கதிரித்தம்பி சிவசோதிநாதன் அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைத்தார்.
இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற நம் உறவுகள் இவ்வகையான பல்வேறு உதவிகளையும் வேறுபட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் வழங்கி வருவதால் பல நலிவடைந்த மக்கள் பயன்களைப் பெற்று வருவது மட்டுமன்றி மாணவர்கள் நம்பிக்கையுடன் தமது கல்வியைத் தொடரும் சாதக நிலமைகளும் ஏற்பட்டுள்ளன எனவும் புலம் பெயர்ந்து வாழ்வோர் தொடர்ந்து தமது உதவிகளை செய்ய வேண்டியது எமது சமூகத்திற்கு மிக அவசியமானது எனவும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் கருத்து தெரிவித்தார்.











