தமிழகத்தில் கெட்டி மேளம் கொட்டிய நேரத்தில் மணமகனை தள்ளிவிட்டு அவரது தம்பி மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் செல்லரைப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன்கள் ரஞ்சித், ராஜேஷ், வினோத். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.
இதனால் இவர்கள் திருமணம் அங்குள்ள பாலமுருகன் கோயிலில் நேற்று காலை நடக்க இருந்தது. காலை 7.30 மணிக்கு மணமேடையில் மணமக்கள் அமர்ந்ததும், திருமண சடங்குகள் தொடங்கியது.
8.45 மணியளவில் பூஜை செய்த தாலியை பெரியோர்களிடம் ஆசி வாங்கி வரச்செய்தனர். கெட்டி மேளம் கொட்ட தாலியை மணமகனிடம் கொடுத்தார் ஐயர்.
அப்போது அருகில் நின்றிருந்த தம்பி வினோத், அண்ணன் ராஜேஷை திடீரென தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த வேறு ஒரு தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் அவசர, அவசரமாக கட்டினார். இதனால் மணமகன், உறவினர்கள் உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ஒன்றும் நடக்காததுபோல் சிரித்த வினோத்தை உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆனால் மணமகள் அமைதியாகவே இருந்தார்.
சந்தேகமடைந்து விசாரித்தபோது இருவரும் காதலிப்பது தெரியவந்தது. ராஜேசுக்கு பெண் பார்க்க சென்றபோது, மணமகள் வினோத்தை பார்த்து சிரித்துள்ளார்.
அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதை யாருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டனர். இந்த விவரம் தெரிந்ததும் மணமகளையும் உறவினர்கள் சரமாரி அடித்து உதைத்து, இதை முதலில் தெரிவித்திருக்கலாமே என திட்டியுள்ளனர்.
சினிமாவில் வருவதுபோல நடந்த இந்த திடீர் திருமண மாற்றத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது.






