195 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் கட்டியமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை போக்குவரத்து மற்றும் பயணியர் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த 16 ஜனவரி 2017 வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.
இதில் 13 பஸ்கள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும் 21 பஸ்கள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடத்தக்க வகையில் A9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில நாளாந்தம் 100 பஸ்கள் வந்து செல்லத்தக்க வகையில் நவீன முறையில் இந்த பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி, நடத்துனர்களுக்கிடையிலான ஏற்ப்ட்ட கருத்து முறன்பாடுகள், மோதல்கள் காரணமாக புதிய மத்திய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
கடந்த 26 ஆம் திகதி வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 09 ஆவது அமர்வு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் மன்னாரில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
கடந்த 15 ஆம் திகதி பல்வேறு சட்ட ஒழுங்குகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாகாணத்திற்குள் சேவை வழங்குகின்ற இலங்கை போக்குவரத்து சபையினருக்கு 40% மும் தனியார் பேருந்துகளுக்கு 60% ம் என்ற வகையில் பேரூந்து சேவைகளை ஒழுங்குசெய்யவும், அதனடிப்படையில் இணைந்த நேர அட்டவணையை தயார்செய்து அமுல்படுத்துவது தொடர்பில் விசேட ஏற்பாடுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும்,
அத்தோடு இவற்றை மீறுகின்ற தரப்பினருக்கு எதிராக 10,000/= ரூபாய் தண்டப்பணமும் அல்லது இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கவும் அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்கநேரிடும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் தலமைக்காரியாலயம் மற்றும் இ.போ.சபையின் வடபிராந்திய அலுவலகத்தின் வேண்டுகோளிற்கு இனங்க இ.போ.சபையின் பேரூந்துகள் நேற்று (03.06.2017) முதல் புதிய பேரூந்து நிலையத்தில் சேவையினை ஆரம்பித்துள்ளது.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள இ.போ.ச சபையின் பேரூந்து நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புதிய மத்திய பேரூந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
எனினும் தனியார் பேரூந்துகள் புதிய மத்திய பேரூந்து நிலையத்தில் சேவையினை வழங்கவில்லை என இ.போ.ச ஊழியர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்தின் சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரனிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,
இ.போ.சபையின் அனைத்து பேரூந்துகளும் புதிய மத்திய பேரூந்து நிலையத்திற்கு செல்வதில்லை எனவும் இவ்விடயம் தொடர்பாக தற்போது வன்னி பிராந்தி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கூட்டம் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
எனினும் புதிய மத்திய பேரூந்து நிலையத்தில் பயணிகள் எவரும் இல்லாமல் தற்போது புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையின் பேரூந்துகள் சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















