கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை 5 நாடுகள் துண்டித்துள்ளன. தமது நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதற்கு மூன்று வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு கவலை தெரிவித்துள்ளது.
கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்கவும் எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன்,எகிப்து மற்றும் யேமன் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
இந்தத் தீர்மானம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அடிப்படைகள் அற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் எடுக்கப்பட்டுள்ளதை கட்டார் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம் அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக கட்டார் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முரண்பாடுகளை தூண்டும் பிரசாரங்களின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாகவும் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எகிப்து அரசின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் கட்டார் மீது மேலாதிக்கத்தை திணிக்கின்ற அதன் இறையாண்மையை மீறுகின்ற செயற்பாடாகும் எனவும் கட்டார் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குற்றத்திற்காக சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை இடைநிறுத்தியுள்ளது.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு கட்டார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
கட்டாருடனான வான், கடல் மற்றும் தரை எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக சவூதி அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத ஆபத்துக்களில் இருந்து தேசத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பணியாற்றும் கட்டார் இராஜதந்திரிகளை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது.






