கட்டார் நாட்டுடான உறவு துண்டிப்பு : பாதிப்புகள் என்னென்ன?

588

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி கட்டார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளன.

இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாக கத்தார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இந்நிலையில் கட்டாருடனான உறவை இஸ்லாமிய நாடுகள் துண்டித்துக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?

சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து உறுதியான பின்புலமாகவும் கட்டார் விளங்குகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட தாலிபான்களை டோகாவில் அலுவலகம் திறக்கச் செய்து, அவர்களை அரசியல் பாதையில் செலுத்த கட்டார் முயன்றது.

இவை தவிர, ஏமன், லெபனான், சோமாலியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் அன்றாட நடவடிக்கைகளை தீர்மானிப்பதிலும் கட்டார் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் அமைதியையும், அரசியல் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த விரும்பும் நாடுகள், கட்டாரின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியது அவசியம் என்பதே இன்றைய நிலை.

கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு என்பதால் கட்டாருக்கு எதிரான நடவடிக்கை இவற்றின் விலையில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தியாவின் இறக்குமதி முழுவதும் நேரடியாக கடல் வழியாக நடப்பதால், பாதிப்பு குறைவாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் கட்டார் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்வதாக கட்டார் அறிவித்துள்ளது.

இதேபோல், அபுதாபியில் இருந்து கட்டார் செல்லும் எத்திஹாட் ஏர்வேஸ் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரபு நாடுகளில் வசிக்கும் கட்டார் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கட்டாரில் வசிக்கும் சவுதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு கட்டார் நாட்டுக்கு திரும்புவதற்கு 14 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கட்டார் நாட்டுடனான எல்லையை மூடப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சாலை, கப்பல், விமானம் ஆகிய போக்குவரத்துகள் மற்றும் தூதரக ரீதியிலான உறவை முடித்துக்கொள்வதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் மற்ற நாடுகளும் கட்டார் நாட்டுடான அனைத்து வகையான உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

சவுதி அரேபியாவில் இருந்து செயல்படும் ஏமன் அரசும், கட்டாருடனான உறவைத் துண்டிப்பதாகக் கூறியிருக்கிறது.