கட்டார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் சவுதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கட்டார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமை மூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கட்டாருடனான தங்கள் இராஜதந்திர உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன.
பஹ்ரைன்,சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கட்டார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கட்டார் மறுக்கிறது; “வெளிப்படைத்தன்மையுட னும் நேர்மையுடனுமான பேச்சுவார்த்தைகளுக்கும்” பிற நாடுகளை கட்டார் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியிலிருந்து, மறு அறிவிப்பு வரும்வரை, எகிப்து வான்பரப்பு கட்டார் விமான சேவைகளுக்கு மூடப்படும் என எகிப்து தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துகளை இணைக்கும் முக்கிய தளமாக கட்டாரின் தலைநகர் டோகா இருப்பதால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கட்டார் ஏர்வேஸ், எத்திஹாட் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டார் நாட்டின் மேற்கில், பெரிய நாடாக இருக்கும், சவுதி அரேபியாவின் வழியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டார் நாட்டு விமானங்கள், கூடுதல் தூரப் பாதைகள் மூலம் பயணிக்க வேண்டும், எனவே பயண நேரமும் அதிகமாகும்.
இருப்பினும் கட்டார் விமானங்கள், சர்வதேச கடல் பகுதி என்றும் சர்வதேச வான்வெளியில் பறக்க முடியும் என்று கட்டாரின் வெளியுறவு அமைச்சர், ஷேக் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்- தனி, அல்ஜசிரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவிற்கு உட்பட்ட வான்பரப்பை, வழக்கத்தைவிட அதிகமாக திங்கட்கிழமை 15 கட்டார் விமானங்கள் பயன்படுத்தியதாக, பெயர் வெளியிடாத சோமாலி அதிகாரி ஒருவர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
– பிபிசி-






