மார்போடு அணைத்துக் கொன்றேன் : பெற்ற பிள்ளைகளை கொன்ற வழக்கில் தாய் வாக்குமூலம்!!

666

நாகர்கோவில் அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் ஈத்தாமொழியை சேர்ந்த தம்பதி கண்ணன்- திவ்யா. இவர்களுக்கு ஏற்கனவே அனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 22ம் திகதி திவ்யாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. பிரசவத்துக்கு பின்னர் திவ்யா குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2ம் திகதி திடீரென இரண்டு குழந்தைகளும் இறந்து போயின, குழந்தைகளை கண்ணன் வீட்டு வளாகத்தில் புதைத்துள்ளனர். பால் அருந்தும் போது இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து புகார்கள் வந்ததால் வழக்கு பதிவு செய்த பொலிசார் குழந்தைகளின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

அதில் குழந்தைகள் இருவரும் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரட்டை குழந்தைகளை கொன்றதை திவ்யா ஒப்புக் கொண்டுள்ளார்.

பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய கணவர் கண்ணனுடன் பிறந்தவர்கள் நான்கு அண்ணன் தம்பிகள். இவர்களில் மூன்று பேருக்கு திருமணமாகிவிட்டது, மூன்று பேருக்குமே பெண் குழந்தைகள் தான்.

எனவே எனக்கு ஆண் வாரிசு பிறக்கும் என எதிர்பார்த்தனர், ஆனால் பெண்ணாக பிறந்தது. இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது, இதனால் கணவர் வீட்டிலிருந்து யாரும் பேசவில்லை.

என்னுடைய கணவர்கூட சரியாக பேசவில்லை, குழந்தைகளை கூட வந்து பார்க்கவில்லை. இதனால் எனக்கு பயம் வந்துவிட்டது, எனவே பாலூட்டும் போது மார்போடு அணைத்து குழந்தைகளை கொன்று விட்டேன்.

தாய்ப்பால் கொடுக்கும் போது புரைக்கேறி இறந்துவிட்டதாக தெரிவித்தேன், குடும்பத்தினரும் நம்பிவிட்டனர் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திவ்யா கைது செய்யப்பட்டுள்ளார்.