வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியிலுள்ள மரக்காலை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை மாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மரக்காலை ஒன்றில் வேலை செய்த இருவர் உரிமையாளர் வெளியில் சென்ற தருணம் பார்த்து பணம் வைக்கும் பெட்டகத்தினை உடைத்து 110 000 ரூபாவை திருடியுள்ளனர்.
உரிமையாளர் மீண்டும் வந்து பார்த்த போது பெட்டகம் உடைக்கப்பட்டிருந்தது. இவ் விடயம் தொடர்பாக செவ்வாய் கிழமை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த மரக்காலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியை (CCTV) பரிசீலித்த பொலிசார் அங்கு பணி புரியும் இருவரை சோதனை செய்த போது 99000 ரூபா பணம் வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் இருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.







