செல்வம் அடைக்கலநாதன் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசம்!!

400

selvam-adaikalanathan

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது..

நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.



கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை எனக்கு உள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி மக்கள் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். 2013 ஆம் ஆண்டு வரை மக்கள் எமது கட்சிக்கு பெரும் ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.

ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பான அமைச்சுப்பதவி வன்னி மாவட்டத்திற்கு கிடைக்காத நிலையில் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த மக்களுக்கு பெறுப்புக்கூற வேண்டிய தார்மிக பொறுப்பு என்னிடமுள்ளது.

எனவே தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) தலைவர் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளேன். இது தொடர்பில் சில தினங்களில் எனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளேன். என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.