மியன்மாரில் காணாமற்போன விமானம் அந்தமான் கடலில் வீழ்ந்தது : சடலங்கள் கண்டுபிடிப்பு!!

780

 
மியன்மாரில் காணாமற்போயிருந்த இராணுவ விமானத்தின் பாகங்களும் அதில் பயணித்தவர்களின் சடலங்களும் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் சில பாகங்களும் ஒரு குழந்தை உட்பட மூவரின் சடலங்களும் அவர்களின் பயணப் பொதிகளும் பாதுகாப்புக் கவசங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரின் தெற்கு கடலோரப் பகுதி நகரான மெய்க்கில் இருந்து மியன்மாரின் மிகப்பெரிய நகரான யாங்கூனுக்கு 116 பயணிகளுடன் புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று நேற்று முன்தினம் (07) காணாமற்போனது.

அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 105 பேர் கடலோரப் பகுதியில் வசிக்கும் இராணுவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அந்தமான் கடற்பகுதியில் மேற்கு தவேய் நகரை நெருங்கிப் பறந்து கொண்டிருந்தபோதே விமானத்துடன் இருந்த ரேடார் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டு மாயமானது.

அதன்பிறகு அந்த விமானம் எங்கே சென்றது என்பதும், அதில் இருந்தவர்களின் கதி என்ன ஆனது என்பது பற்றியும் உடனடியாக எந்தத் தகவலும் தெரியவரவில்லை.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் கப்பல்களும் இராணுவ விமானங்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், அந்தமான் கடற்பகுதியில் குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று காலை தேடுதல் பணியில் விமானங்களும் கப்பல்களும் ஈடுபட்டிருந்த போதே அவற்றைக் கண்டுபிடித்துள்ளன.