புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த தேவாலயமொன்றில் திருமண வைபவமொன்று நடைபெற்றதால், இத்திருமண வைபவத்தில் கலந்துகொண்ட மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்த நிலையில் காணப்பட்டனர்.
இங்கிலாந்தின் சரே பிராந்தியத்திலுள்ள பான்ஸ்டெட் நகர தேவாலயமொன்றில் இத்திருமண வைபவம் நடைபெற்றது.
55 வயதான அன்டி போய்ஸ் என்பவரும் 49 வயதான சுசான் கெம்பெல் என்பவருக்கும் இடையில் இத்திருமண வைபவம் நடைபெற்றது. 23 வருடங்களாக இணைந்து வாழும் ஜோடி இது.
800 வருட காலம் பழைமை வாய்ந்த தேவாலயமொன்றில் இவர்கள் திருமண வைபவத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர், மேற்படி தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், அதே தேவாலயத்தில் தமது திருமணத்தை நடத்துவதற்கு இந்த ஜோடியினர் தலைக்கவசம் அணிந்த நிலையில் திருமண வைபவத்தில் பங்குபற்றினர்.
அவர்களைப் போலவே திருமண வைபவத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களும் தலைக்கவசம் அணிந்திருந்தனர்.