அல்ப்ஸ் மலை பகுதியில் வாழ்ந்து வந்த பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார் என்பது குறித்த விசாரணையை இப்போது இத்தாலி அரசு தொடங்கவுள்ளது.
வடக்கு இத்தாலியில் அல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் அல்ப்ஸ் பகுதியில் தொலைத் தூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆய்வின் போதுதான் அது 5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனி மனிதன் எனத் தெரிய வந்தது.
அந்த பனிமனிதனின் பின்புறத்தில் ஒரு அம்பு பாய்ந்திருந்தது. அந்த அம்பு அவருடைய முக்கியத் தமனியை தாக்கியதால், ஏற்பட்ட பாதிப்பால் அவர் சில நிமிடங்களுக்குள் இறந்துவிட்டார்.
அவரது உடல் பனிக்குள் புதைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடந்தது.
கடந்த 1991ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட ஓட்ஸியின் உடலில் இடது தோள்பட்டையில் அம்பின் முனை இருந்தது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து கண்டெடுக்கப்பட்டது.
உலகின் பழமையான, சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்த உடல்களில் ஓட்ஸியின் உடல் முக்கியமானது.
மூத்த புலனாய்வு துறை ஓட்ஸி எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தொடங்கப்பட்டது. மூத்த புலனாய்வு அதிகாரிகளை கொண்டு ஓட்ஸியை கொன்றது யார் என்பது கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
5300 ஆண்டுகளுக்கு முன்னர்…
இதுகுறித்து புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் அலெக்சாண்டர் ஹார்ன் கூறுகையில், வழக்கமாக 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வழக்குகளைதான் தோண்டி எடுத்து விசாரணை நடைபெற்று வந்தது.
ஆனால் தற்போது 5300 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வழக்கை விசாரித்து வருகிறோம்.
ஓட்ஸியின் வயிற்றின் உள்பகுதிகள், உடல் காயங்கள் குறித்த 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஓட்ஸி கொல்லப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் அவர் மாமிசத்தை அதிகமாக உட்கொண்டிருந்தார்.
இதனால் அவர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக தெரியவில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
எந்த கோணத்தில் விசாரணை
பனிமனிதர் ஓட்ஸியின் உணவு பழக்க வழக்கங்கள், உடை உடுத்தும் முறை மற்றும் அவரது சந்ததியினர் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் அவரது வலது கையில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து ஒரு துப்பு கிடைத்துள்ளது. இதை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம்.
கடந்த 5300 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட ஓட்ஸியின் உடல் நல்ல நிலையில் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் என்ன ஆச்சரியம், அவரது உடல் மிகவும் நல்ல நிலையில் இருந்தது.
அவர் 100 அடி உயரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
தனிப்பட்ட விரோதமே கொலைக்கு காரணம்
கொலை செய்தவருக்கும், ஓட்ஸிக்கு கைகலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். மலையில் அவரை பின் தொடர்ந்து பனிபகுதியில் அவரை கொலை செய்துள்ளனர்.
ஓட்ஸியின் விலை மதிப்புள்ள காப்பர் பிளேடால் ஆன கோடாரி உள்ளிட்ட பொருள்களை கொலைகாரர் திருடிக் கொண்டு செல்லவில்லை.
எனவே தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என ஹார்ன் தெரிவித்தார்.






