வவுனியா வேப்பங்குளம் சிறுவர் இல்லம் பல சவால்களின் மத்தியில் சமூகப்பணி புரிந்து வருகின்றது!!

1656

 
நேற்று (11.06.2017) வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக லண்டன் V3 அமைப்பைச் சேர்ந்த பொ.மோகனரூபன் தனது மகனான சாருஜனின் பிறந்த தினத்தையொட்டி மூன்று வேளை உணவு வழங்கி மகிழ்வித்தனர்.

இந் நிகழ்வில் இல்ல இயக்குனர் சாமி அம்மா மாவட்டசமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தமிழ் விருட்சம் தலைவர் செல்வராசா சந்திரகுமார் கண்ணன், தமிழ் விருட்சம் செயலாளர் மாணிக்கம் ஜெகன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பக சிறுவர் இல்லம் 1997 இல் இருந்து சாமி அம்மா என அழைக்கப்படும் ஜெயராணி அம்மாவால் நடாத்தப்பட்டு வருகிறது. பல இன்னல்களை மக்கள் எதிர்கொண்ட காலங்களில் நீதிபதிகள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகரிகள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கேட்டு கொண்டபோதெல்லாம் இனமத பேதமின்றி பலதரப்பட்ட பிரதேசங்களில் இருந்து வரும் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்துள்ளது.

மேலும் எந்த வயதினராக இருந்தாலும் மறுப்பின்றி அந்தப்பிள்ளைகளை பொறுப்பேற்று உரிய முறையில் அவர்களை வளர்த்து வருகிறது.

இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இங்கு கைக்குழந்தைகளாக சேர்கப்பட்ட பிள்ளைகள் இன்று பெரியவர்களாகியும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் பெண்பிள்ளகைள் பெற்றோருடன் வாழும் போது அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை இந்த இல்லத்திற்கு பொறுப்பான அம்மா சரிவர ஆற்றி வருகிறார்.

பூப்புனித நீராட்டு விழா, மற்றும் திருமணச்சடங்குகள் என்பனவும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் காலங்களிலும் இந்த இல்லம் இந்த இடத்தில் இருந்து தொடர்ச்சியாக இயங்கவேண்டும் என்பது பல சமூக நலன்விரும்பிகளின் கருத்தாகும்.