நடிகை அஞ்சலி மீதான அவதூறு வழக்கில் அவர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி.
இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறியிருந்தார்.
இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும் பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என கூறி இயக்குனர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளர்.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ராஜலட்சுமி முன் வந்தது. அப்போது நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நடிகை அஞ்சலி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
அதற்கு இயக்குனர் களஞ்சியம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு நகலை பெற நடிகை அஞ்சலி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை 29ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.