ஸ்ரீகாந்துக்காக பாடகர் அவதாரம் எடுத்த சந்தானம்!!

312

santhanam

சந்தானம் நடிக்கும் படங்களில் வசனங்களுக்கிடையே அவ்வப்போது சில இடங்களில் அவர் பாடவும் செய்திருப்பார். இப்போது முதன்முறையாக ஒரு முழு பாடலை பாடியுள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் நம்பியார் படத்திற்காகத்தான் இந்த பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய் அண்டனி இசையில் விவேகா எழுதியுள்ள வரிகளுக்கு பாடியிருக்கும் சந்தானம் குறித்து இப்படத்தின் இயக்குனர் கணேஷா கூறும்போது..

நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார். அவரை ஏன் இன்னொரு ஹீரோ என்று சொல்கிறேன் என்பதை படம் வெளிவரும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள். காமெடிக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகியிருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி பயணப்படும் படம் அல்ல.

இப்படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் வரும் பாடலை யாரை பாடவைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் விஜய் அண்டனி சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் இதை சந்தானத்திடம் கூறினால் அவர் மறுத்துவிடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் சந்தோஷமாக பாட வந்துவிட்டார். பதினைந்து நிமிடங்களிலேயே இந்த பாடலை பாடி முடித்து கொடுத்துவிட்டார்.

ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் இடம்பெறும் காட்சியை மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம். இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு கச்சிதமாக பொருந்தி வந்திருக்கிறது என்றார்.

ஸ்ரீகாந்த் கூறும்போது சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக்கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார். நீங்க ஜெயிக்கணும் என்ற அவரோட நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். சந்தானத்துக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார்.