நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இரத்த தானம், கண் தானத்தை ஊக்குவித்தார். தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளில் இலவசமாக பங்கேற்று வருகிறார். சென்னையில் பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் கட்டும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
அடுத்த கட்டமாக அரசியலுக்கு வருகிறார். நமீதா குஜராத்தை சேர்ந்தவர். எனவே அங்கு நரேந்திர மோடியை சந்தித்து பாரதீய ஜனதாவில் சேர்வார் என கூறப்பட்டது. குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சியில் பதவி பெற்று அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் செய்திகள் பரவின. இதற்கு நமீதா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..
நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்து உள்ளேன். இந்த ஆர்வம் எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பே ஏற்பட்டது. எந்த கட்சியில் சேரலாம் என்று யோசித்து வருகிறேன். நான் பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. சென்னையில்தான் நான் தங்கி இருக்கிறேன். இங்கு குடியேறி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. என் பாஸ்போர்ட்டில் சென்னை முகவரிதான் இருக்கிறது.
எனவே இங்கிருந்து வேறு எங்கும் போகமாட்டேன். தமிழக அரசியல் கட்சியொன்றில் விரைவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபடப்போகிறேன். தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளேன் என்று நமீதா கூறினார்.