முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் : மஸ்தான் எம்.பி வேண்டுகோள்!!

216

நாட்டில் முஸ்லிம்களுடைய மதஸ்த் தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.மஸ்தான் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

மேலும் சமூக ஊடகங்களூடாக இனவாதத்தை தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கள், தகவல்கள் என்பனவற்றை பகிர்வதையும் பதிவு செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் இந்த புனிதனமான றமழான் மாதத்தில் பொறுமையை கடைப்பிடித்து இறைவனிடம் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளுக்கு சரியான தண்டனை கிடைக்கை பிரார்த்தனைகள் செய்துகொள்ள வேண்டும்.

அண்மைக்காலமாக சில மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகின்றனர் என்னைப்பொறுத்தவரியில் அது தவறு என்றே கருதுகின்றேன் ஏனெனில் இப்பொழுது நாம் எதிர்நோக்கியுள்ள இந்த துர்பாக்கியமான நிலையினை வன்முறைகள் மூலம் தீர்க்கலாம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

அழுத்கம, பேருவளை சம்பவங்களே இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் இவ்வாறான பேச்சுக்களை நிதானமாக மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.

சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்துக் கொண்டு வந்த நல்லாட்சி முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கான நடவடிக்கைகளை ஆமை வேகத்தில் நகர்த்திச்செல்லுமாக இருந்தால் நல்லாட்சியின் எதிர்கால நகர்வுகளில் கேள்விக்குறியே ஏற்படும்.

மேலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துப்படவுள்ள அநீதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து எடுக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதற்கு தானும் உடன்படுவேன் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.