தமிழரசுக் கட்சியின் சர்வதிகாரப் போக்கே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு காரணம் : சிவசக்தி ஆனந்தன் காட்டம்!!

316

தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான, சர்வதிகாரப் போக்குடைய செயற்பாடே வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை முன்மொழிவு என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஊழல் மோசடிக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தையடுத்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதை எக்காரணம் கொண்டு ஏற்க முடியாது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் முடிவெடுத்து செயற்படலாம் எனத் தெரிவித்த பின்னர் அவரை முடிவெடுக்க விடாமல் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.

நான்கு அமைச்சர்கள் தொடர்பில் முடிவெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அரசாங்க கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு சர்வதிகாரப் போக்குடன், தான்தோன்றித்தனமாக தமிழரசுக் கட்சி முடிவெடுத்து ஏனைய பங்காளிக் கட்சிகளின் கருத்துக்ளைப் பெறாது வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையளில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

இதனை நாம் கண்டிக்கின்றோம். இத்தகைய செயற்பாடுகளுக்கு எமது கட்சி எப்போதும் உடந்தையாக செயற்பட மாட்டாது.

7 உள்ளூராட்சி சபைகளில் தமிரசுக் கட்சி ஈபிடிபியுடன் இணைந்து நம்பிக்னையில்லா பிரேரணையை முன்னர் கொண்டு வந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த நல்லுறவின் அடிப்படையில் அரச கட்சிகளுடன் இணைந்து வடக்கு மாகாண முதலமைச்சரையும் மாற்ற முயல்கிறது.

வடமாகாண முதலமைச்சர் தமிழரசுக் கட்சிக்குரியவர் அல்ல. அவர் மீது கட்சித்தலைவர்களுடன் பேசி முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

அவர்களின் சர்வதிகாரப் போக்கை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முதலமைச்சரின் கரங்களைப் பலப்படுத்த எமது கட்சி குரல் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.