வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு V3 அமைப்பு உதவி!!

638

 
பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களில் வசதி குறைந்த மாணவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நலன்விரும்பிகள் மூலம் கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக பாடசாலை ஆசிரியர் அ.ரஞ்சன் கேட்டுக்கொண்டதற்கிணங்க லண்டனில் உள்ள V3 அமைப்பினர் நேற்று கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

இவ்வமைப்பின் உறுப்பினர் லண்டன் வாழ் தி.கிருபாகரன் தனது மகன் செல்வன் கி.அகழியனின் பிறந்ததினத்தை முன்னிட்டு செல்வி சி.துஸானிக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கினார். மேலும் V3 அமைப்பினர் 30 மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் வழங்கியுள்ளனர்.

மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன், அபிவிருத்தி உத்தியோகத்ததர் எஸ்.கே.வசந்தன் மற்றும் எஸ்.புருசோத்தமன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் தனது உரையில் பல சவால்களை எதிர்கொண்டு இந்தக்கல்லூரிக்கு மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர் .இவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை. அந்த வகையில் இன்று வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக லண்டனில் உள்ள V3 அமைப்பினர் உதவிபுரிவதை நான் நன்றியுடன் வரவேற்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன் மாணவர்கள் தமது கல்விக்கு மேலாக ஒழுக்கத்தை கண்ணெனப்போற்ற வேண்டும் அதை உயிராக மதிக்க வேண்டும் , ஒழுக்கம் ஏதாவது ஒரு கட்டத்தில் எமக்கு உயர்வைத்தரும் .பல விசமிகள் மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்குழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைகளின் அருகே இனந்தெரியாதோர் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் பாடசாலை சமூகமும் ஊர்மக்களும் அவற்றைத்தட்டிக்கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.