வடமாகாண முதலமைச்சரின் எச்சரிக்கை!!

290

வடக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள கூடிய நிலை ஏற்படலாம் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் பின்னணியில் மறைந்திருந்து எவராவது தகாத முறையில் நடந்து கொண்டால், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் மக்கள் தமது மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகிறேன்.

எனினும் அவர்களாகவோ அதற்குள்ளிருக்கும் சில கறுப்பாடுகளோ, எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களானால், பொலிஸாரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

அதனால், அவர்கள் ஆளுனரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக் கொண்டால் மக்களை நாம் அமைதிப்படுத்த முடியும்.

மக்களும் அளவுக்கு மீறிச் சென்று தமது மனநிலையை வெளிப்படுத்த முனையக் கூடாது. அவ்வாறு செய்தால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படும். அரசாங்கம் அதனைக் காரணமாக வைத்து நடவடிக்கை எடுக்கலாம்.

மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், சில கறுப்பாடுகள் செய்யக்கூடும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.