இந்திய அரசைக் கண்டித்து போராட்டம் : தமிழகத்தில் 70 000 பேர் கைது!!

490

T.Pandian

விலைவாசி உயர்வு மற்றும் இந்திய மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

இதில் தமது கட்சி சார்ந்த 15 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 70 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மத்திய அரசு அலுவலங்களை மறியல் செய்யும் போராட்டத்தை நடத்திட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு விடுத்த அறைகூவலின்படி 05.10.2013 சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மறியல் போராட்டத்தில் 280 மையங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ந்த 15 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 70 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்தியாவசிய பொருட்களின் அநியாய விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம் என்பதோடு இயற்கை வளங்களையும் கார்ப்பேரேட் நிறுவனங்கள் குறிப்பாக அந்நிய நாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு ஒத்துழைப்பது, ஊழல்கள் மலிந்த நாட்டின் வளர்ச்சியும் நிர்வாகத்தையும் பாழடித்து வருவதைக் கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சென்னையில் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நெல்லையில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, திருச்சியில் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், திருவாரூரில் மாநில துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, மற்றும் இதர மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில செயற்குழு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் பேர் பங்கேற்றனர். என்று கூறியுள்ளார்.