தற்கொலை சம்பவங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என கோரிக்கை!!

229

தற்கொலை செய்து கொள்வதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் ரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான சம்பவங்களுக்கு ஊடகங்கள் ஊடாக அநாவசிய பிரச்சாரங்கள் வழங்கப்படுவதனால், அவ்வாறான தற்கொலைகள் சமூகத்தின் மத்தியில் மேலும் பிரபல்யமடைவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு சிக்கல் மற்றும் பிரச்சனைகளினால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அவ்வாறான செய்திகள் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாராவது மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தில் ஆலோசனை சேவை பெற்றுக் கொள்வதற்கான நிலையங்கள், அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவுகளில் செயற்படுகின்றது. அவ்வாறான நிலையங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு குறைவானவர்கள் அவ்வாறான சிக்கிலின் போது 1929 என இலக்கத்திற்கு அழைத்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மனோதத்துவ பிரிவின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.