ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில்,
“கடந்த 11ஆம் திகதியோடு 26 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவடைந்து 27ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
2014ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் அம்மாவின் முடிவுதான் இங்குள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது.
அரசியல் தலைவர்கள் எந்தப் பாகுபாடின்றி எங்கள் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்க, நீதிமன்றமும் எங்களை விடுதலைக்குப் பரிந்துரைத்தும் எந்தக் காரணத்தால் எங்களின் விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
இதற்கு முன் இருந்த மத்திய அரசும் தற்போதைய மத்திய அரசும் எமது விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறது. சிறைக்குள்ளே எனக்கு வாழ்வை முடித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எனது 26 ஆண்டுகால சிறை வாழ்க்கை பெரும் வேதனையைத் தருகிறது. இனி விடுதலை இல்லை என்ற நிலையில் இதுவரை இல்லாத எண்ணங்கள் வேரூன்றுகிறது.
இனி விடுதலை இல்லை என்ற நிலையில் இனி உயிர் வாழ்வதிலும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகவே, தயவுசெய்து என்னை கருணைக் கொலை செய்து எனது உடலை என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்” என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.









