100 ரூபாவுக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பு : அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு!!

268

அனர்த்த நிலைமையிலான பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் கடவுச்சீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் வெளிநாட்டு கடவுச்சீட்டு காணாமல் போயிருந்தால், புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பரிந்துரையின் படி, விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறைந்த விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டாலும், இதுவரை வெளிநாடு செல்லாத நபராக இருந்தால், அந்த நபரிடம் 100 ரூபாய் என்ற சாதாரண கட்டணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணம் ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை மாத்திரம் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.

தற்போது காணப்படுகின்ற சட்டரீதியான நிலைமையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலப்பகுதி முடிவதற்கு முன்னர் காணாமல் அல்லது சேதமடைந்திருந்தால் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளும் போது 10000 ரூபாய் அறவிடப்படுகின்றது.

எனினும் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறிப்பிடத்தக்க அளவு மக்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.