வடமாகாண சபையே அரசியல் சிபாரிசுக்கு முன்னுரிமை வழங்காதே : வவுனியாவில் போராட்டம்!!

581

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (22.06.2017) ஐம்பதாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று ஐம்பதாவது நாளை முன்னிட்டு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக இன்று (22.06.2017) காலை 10.30 மணியளவில் கறுப்பு ஆடையணிந்தும் கறுப்பு துணியினை வாயில் கட்டியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெயில் மழை பாராது ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வடமாகாண சபையே லஞ்ச ஊழலை கைவிடு தொண்டர்களுக்கு நியாயமான முறையில் நியமனத்தை தா, வடமாகாண சபையே அரசியல் சிபாரிசுக்கு முன்னுரிமை வழங்காதே, யுத்தகாலங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் சிரமம் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய எமக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்த காலத்திலிருந்து தற்போதுவரை எதுவித வேதனமும் இன்றி கடமையாற்றும் எமக்கு கல்வித் தகமையினை கவனத்தில் எடுத்து அரச வேலைவாய்ப்பை வழங்க பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் மூலம் அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சர் எழுத்துமூலம் எமக்கு நிரந்தர அரச வேலைவாய்ப்பு வழங்க உத்தரவாதம் வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.