3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தகாரரான மறைந்த தொழில் அதிபர் ஜே.பி.ஆரின் குடும்பத்தினர் சொத்துக்களை தரமறுத்து தன்னை வீட்டில் சிறை வத்திருப்பதாக இரண்டாவது மகள் ஷீலா பரபரப்பு புகார் கூறி இருக்கிறார்.
சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தின் நிறுவனர் ஜே.பி.ஆர், எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரிய தலைவர், தமிழக சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினர், தமிழக மீன்வளத்துறை இயக்குனர் உள்ளிட்டபொறுப்புகளை வகித்தவர்.
1987ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் அரசியலில் இருந்து விலகி சத்யபாமா பல்கலைகழகம், பனிமலர் பாலிடெக்னிக், ஜேபிஆர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்களையும்,டயர்,மெட்டல், சிமெண்ட், பால் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சாலைகளையும் தொடங்கிய ஜேபிஆர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காலமானார்.
அப்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேபிஆருக்கு பின்னர் அவரது சொத்துக்களை அவரது மனைவி ரெமிபாய் அவரது மகள்கள் மரியா ஷீனா, ஷீலா , ரெஜீனா ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரும் நிர்வகித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜே.பி.ஆரின் இரண்டாவது மகள் ஷீலா சொத்து பாகபிரிவினை தொடர்பாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், தனது தந்தை ஜே.பி.ஆரின் சொத்துக்களை முறையாக பங்கீடு செய்யாமல் 2 கல்லூரிகளை மட்டும் தனக்கு கொடுத்து ஏமாற்றியதோடு, வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள வீட்டிற்குள் பூட்டி சிறைவைத்துள்ளதாகவும் குடிநீரின்றி தவிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.






