இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப் பெருநாளாக அமையட்டும் : காதர் மஸ்தான்!!

294

இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப்பெருநாளாக அமையட்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

நோன்புப்பெருநாள் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செய்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

கடந்து சென்ற ரமழான் மாதம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஒரு பொறுமையையுடன் கூடிய சோகத்தையும் ஏற்படுத்திய மாதமாக அமைந்து இருந்தமையை யாரும் மறுக்க முடியாது. ஒருபகுதி மக்கள் வெள்ளத்தாலும் மற்றுமொரு பகுதி மக்கள் வறட்சியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்களும் குறையவில்லை.

அண்மைக்காலமாக இலங்கைவாழ் முஸ்லிம்களுடைய மதஸ்தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மூலம் பெரும்பாண்மை மற்றும் சிறுபாண்மை சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இன விரிசலை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் சிறுபாண்மை மக்களின் பங்களிப்போடு கொண்டுவரப்பட்ட நல்லாட்சியின் இருப்பு தொடர்பில் சிறுபாண்மையினர் அதிகம் சிந்திக்க தொடங்கிவிட்டனர். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆட்சியாளர்கள் விரைவாக தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும்.

கடந்த கால ஆட்சியில் சிறுபாண்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட செயற்பாடுகளால் ஏற்பட்ட இழப்புக்களையே இன்னும் ஈடு செய்ய முடியாத நிலையில் மீண்டும் அதே நிலை தொடர்வதை முஸ்லிம்கள் விரும்பவில்லை.

அதே நேரத்தில் கடந்து சென்ற ரமழான் மாதத்தில் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வுகளில் அதிகளவிலான சிங்களஇ தமிழ் சகோதர சகோதரிகள் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவ்வாறான தங்களின் வருகை இனங்களுக்கிடையிலான சகவாழ்வை கட்டியெழுப்ப உதவிபுரியும் என நான் நினைக்கின்றேன்.

மேலும் இவ்வாறு சிங்கள தமிழ் மக்களது நிகழ்வுகளில் முஸ்லிம்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதுடன் இந்த நல்ல நாளில் எமது சகோதர இன நண்பர்களையும் உபசரித்து அதன் மூலமாகவும் ஏனைய சமூகத்துடனான சகவாழ்வை கட்டியெழுப்ப முனைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

எமது வன்னி மாவட்டத்திலுள்ள எல்லா இன மக்களுடனும் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம். இந்த ஒற்றுமை ஏனைய மாவட்டங்களிலும் உறுதிப்படுத்தப்படுவதற்கு சமயத்தலைவர்களும் புத்திஜீவிகளும் மக்கள் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டும்.

மேலும் இந்த நாளில் புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் உலகம்வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும்
எமது சகோதர இன மக்களுக்கும் எனது சாந்தியும் சமாதானமும் நிறைந்த நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.