பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற இளைஞன் விபத்தில் பலி : கிராமமே சோகத்தில்!!

265

 
நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற இளைஞனொருவன் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து ஏறாவூர் – கோரளன்கேணி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், மாவடிவேம்பைச் சேர்ந்த யோகநாதன் சஜீவன் (வயது 20) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மாவடிவேம்பு பகுதியில் முடித்து விட்ட நிலையில், பின்னர் களுவன்கேணி கடற்கரைக்கு குளிப்பதற்காக நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.

இதன்போதே, உயிரிழந்த நபரும் அவருடைய நண்பரொருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

அவர்களுடன் சென்ற ஏனைய நண்பர்களுக்கு களுவண்கேணி கடற்கரைக்கு சென்ற பின்னர்தான் குறித்த விபத்து தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்றின் ஊடாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு ஏனைய நண்பர்கள் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் விபத்து இடம்பெற்ற பின்னர் சந்திவெளி வைத்தியசாலைக்கு சிகிக்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட போது சஜீவன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த வந்தாறுமூலையைச் சேர்ந்த எஸ்.சிறிநாத் என்பவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான இளைஞர்கள் தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இதன்போது இளைஞர்கள் மதுபோதையிலும் இருந்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞனின் உயிரிழப்பு மாவடிவேம்பு கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.