தந்தையே மகளை எரித்துக் கொன்ற கொடூரம்!!

287

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளை தந்தையே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஸ்ரப் ராஸா கான். இவரது மகள் 22 வயதான குல்பாஷா பீ. குல்பாஷா பீ, அதே பகுதியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார் குல்பாஷா பீ. அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.

திருமணத்துக்கு பிறகு தனது தந்தை வீட்டுக்கு குல்பாஷா பீ செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர் வீட்டுக்கு ராஸா கான் சென்றுள்ளார். தமது தந்தை திடீரென்று வந்ததால் பதற்றமடைந்து உட்கார்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்த குல்பாஷா பீயிடம் இருந்து அவருடன் வந்திருந்த உறவினர்கள் குழந்தையை பிரித்துள்ளனர்.

பின்னர் வலுக்கட்டாயமாக கட்டிலோடு சேர்த்து குல்பாஷாவை கட்டியுள்ளனர். மேலும் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றியுள்ளனர். தன்னை விட்டு விடும்படி கெஞ்சிய குல்பாஷாவை அவர்கள் இரக்கமின்றி தீயை வைத்து கொளுத்திவிட்டு ஓடிவிட்டனர். கதறிய குல்பாஷாவின் சத்தம் சிறிது நேரத்தில் அடங்கிவிட்டது.

பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் எரிந்து கரி கட்டையானார் குல்பாஷா பீ. இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.