நரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா?

630


white hair

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.



இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும் அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.

அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.



ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும்.



இங்கு அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


இஞ்சி

நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பசை போல் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.


செம்பருத்தி

வாரத்திற்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.


மருதாணி

விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் மருதாணி பொடியை தூவி கெட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்காப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.

கறிவேப்பிலை

நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் தலைமுடியை அலச வேண்டும்.

தயிர்

தயிர் மற்றும் மருதாணியை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நரை முடி மறையும்.

வெங்காயம்

வெங்காயத்தை சாறு எடுத்து அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

மிளகு

நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அந்த நீரை தலைமுடியில் ஊற்றி மசாஜ் செய்து, பின் முடியை அலச வேண்டும்.

நெல்லிக்காய்

தலைமுடியை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.

தேநீர்/கோப்பி

தேநீர்/கோப்பி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு தேநீர்/கோப்பியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.